நான்
என் கவிதைகளை
அதிகமாய் நேசிக்கின்றேன்...
என் கவிதைகளுக்குள்
நானே இருக்கின்றேன்...
வார்த்தைகள்
என் தோழர்கள்
நான் அழைக்காமலே
என்னைத் தேடி வருகின்றனர்...
என் தேவையறிந்தே!
என் கவிதைகளில்
சில உரக்கச் சிரிக்கும்...
மகிழ்ச்சி
பொங்கப் பொங்க
ஆனந்தம் ஊற்றெடுக்கும்...
நான் அழும் போதெல்லாம்
சொற்கள்
எனக்கு ஆறுதல் சொல்லும்...
என்னைத் தேற்றும் வரை
அவைகள் ஓய்வதில்லை...
நான்
எனக்குள் அரசாங்கம்..
என் கவிதைகளே
என் படைக் கலன்கள்..
என்னை வெல்வார் யார்?
நான் தோல்வியில்
துவளும் போதெல்லாம்...
வெற்றியின்
முகவரியைத் தரும்...
கவிதை முயற்சி தரும்...
என் கவிதைகளில்
மனிதத்தை
நிரப்பி வைத்திருக்கிறேன்..
பணம் பார்ப்பதில்லை...
மனம் பார்க்கிறேன்...
எழுதி என்ன கிழிக்கிறாய்?
கேள்விக் கணைகள் வருகின்றன..
உள்ளங்களைக் கிழித்து
உண்மைகளைக்
கவிதைகள் ஊன்றுகின்றனவே!
என்னைப் பிடிக்காத போது
பலர்
முகத்தை திருப்பிக்கின்றனர்...
என் முகம் நோக்கும்
குழந்தையாய்க் கவிதை!
சிறு துளியாய்
'நானும்
இருந்து விட்டுப் போனேன்'
உலகில் அடையாளமாய்
என் கவிதைகள்!
(இக்கவிதையானது 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் "ஆத்மா உலகம்" எனும் இதழில் வெளிவந்தது...)

0 comments:
Post a Comment