இலங்கையைச் சுற்றியிருப்பது
தண்ணீரல்ல...
தமிழர்களின் கண்ணீர்!
இலங்கை
ஒரு கவிழ்ந்து கிடக்கும்
வினாக்குறி!
லெமூரியா தப்ப விட்ட
இந்தியாவின் முற்றுப் புள்ளி!
இலங்கை
காடு மேடுகளில்
தமிழர்களின் ரேகைகள்!
மரம் செடி கொடிகள்
வளர்ந்து நிற்கின்றன...
தமிழர்களின் வியர்வையைக் குடித்தே!
தேயிலை காப்பியைப் பயிரிட்ட
தமிழர்கள்...
அவர்களுக்குத் தலைவலியா?
இந்திய புத்தனை வணங்கியும்
மாறவில்லை...
அவர்கள் இதயம் இரும்பு தான்!
சிங்களர்களின் ஆசையே
தமிழர்களின்
துன்பத்துக்கு காரணம்...
புத்தன் சரணம் கச்சாமி!
உங்களுக்கு ஞானம் பிறக்குமா?
சொல்லுங்கள்....
இலங்கை முழுவதும்
போதி மரங்களை நடுகின்றோம்!
புத்தன் இந்தியா வந்து
வெகு நாட்களாகி விட்டது...
இனி யாரை
வணங்கப் போகின்றீர்கள்?
நாங்கள்
காட்டை நாடாக்கினோம்...
நீங்களோ
நாட்டையே சுடுகாடாக்குகின்றீர்கள்!
நீங்கள்
பாசக்கயிறு வீசும் எமன்கள்...
பாதுகாப்பு இடங்களிலுமா...
உங்கள் உயிர் பறிப்பு வேலை!
எங்கள் சொந்த மண்ணில்
நாங்கள் அடிமைகள்...
இந்தியாவில்
நாங்கள் அகதிகள்!
எது எங்கள் தாய் நாடு?
நாற்றுக்களைப்
பிடுங்கி நடலாம்...
எங்கள் நாட்டில்
மரங்களே வேரோடு பிடுங்கப்பட்டு
வெளிநாடு போகின்றது!
ஐ.நாவுக்கு கட்டுப்படாத
காட்டுமிராண்டிகளை..
கட்டுப்படுத்துவது யார்?
மனித நேயம்
சிலுவையில் அறையப்படுகின்றது...
மரிக்கின்ற சிசுக்களிளிருந்து
உயிர்த்தெழப் போவது யார்?
வானக்கூரைப் பள்ளிக் கூடத்தில்
வேடிக்கை பார்க்கும்
எம் பிள்ளைகள்...
விழப் போவது உணவுப் பொட்டலமா?
வெடிகுண்டா?
நவீன ஹிட்லரின்
பேரினவாதம்...
வெள்ளாடுகளை வீழ்த்திவிட்டு
வீரம் பேசுவதா?
உலகத்தோரே
ஒன்று கூடுங்கள்...
இங்கே சக மனிதன்
செத்துக் கொண்டிருக்கிறான்...
இலங்கை! இலங்கை!
இங்கே யார் அவிழ்ப்பது?
தமிழனின் அடிமை விலங்கை!
("கண்ணீர் தேசம்" என்று தலைப்பிடப்பட்ட இக்கவிதையானது தமிழ்க்கலை இலக்கியப் பேரவை நங்கை நல்லூர் கிளையின் எட்டாவது படைப்பான "வளையாத நாணல்கள்" என்ற நூலின் ஏழாவது பக்கத்தில் வெளிவந்தது.)



1 comments:
சிறப்பான கவிதை ஐயா... என்ன சொன்னாலும், எழுதினாலும் நம்ம சனங்களுக்கு புரியாது ஐயா...
Post a Comment